11 July 2012

கனவுகள் கலைந்தன

கனவுகள்! இவை எம் இனத்தின்
கலையாத நினைவுகள்!
கனவுகள் கண்டு கண்டே
கனத்துப் போயின எம் கண்கள்!

பால் பருகும் குழந்தை முதல்
பல் விழுந்த பாட்டி வரை
பகலிரவாய் கனவுகள்
ஆனால் பலிக்காத கனவுகள்!

விளையாட்டு விமானம் வாங்கி வர
வீதி வரை சென்ற தந்தை
விமான குண்டுகளால் வீழ்ந்த போது
வீணாகிப் போயின பாலகனின் கனவுகள்!

பள்ளிப் பருவமதில்
பாடசாலை சென்ற போது
பணக்காரர்களின் பகிடிவதைகளில்
பாழாகிப் போயின ஏழையவன் கனவுகள்!

கல்லூரிப் பயணமதின் கடைசிப் பாதையிலே
கலைந்து போகையிலே
தொலைந்து போயின – எம்
கறையில்லா நட்பின் கனவுகள்!

வேலையற்ற பட்டதாரியாய்
வேலை தேடி அலைந்த போது
காசு வலை வீசி காக்கா பிடிக்கும்
காரியதாரிகளிடம் கலைந்து போனது
கல்வி கற்றவனின் தொழிற் கனவுகள்!

உயிருக்குயிராய் காதலித்த- உன்
உண்மைக் காதலன் தன் மனைவியை
உன்னிடம் அறிமுகப்படுத்திய போது
உடைந்து போயின உன் வாழ்க்கை கனவுகள்!

அம்மி மிதித்து, அருந்ததி பார்த்து,
ஆசி கூறி செய்து வைத்த கல்யாணம்
விவாகரத்து கோரி நிற்கையிலே
வீணாகிப் போயின அந்த வீட்டின் கனவுகள்!

முதிர்வுக் காலமதை – தன்
மூத்த பிள்ளையுடன் கழிக்க விரும்பிய
மூதாட்டியின் முக்கிய கனவுகள்
முதியோர் இல்லத்தில் மூழ்கிப் போயின!

சமாதானத்தை எதிர்பார்த்து
சதா ஏங்கித் தவித்த போது
யுத்தத்தில் கலைந்தன
தமிழனின் அமைதிக் கனவுகள்!

எங்கும் கனவுகள்
எப்போதும் கனவுகள்- ஆனால்
எதிர்பாராத விதமாய் எம்மை
ஏமாற்றும் கனவுகள்!

சகோதரா! சோர்ந்து விடாதே!
சத்தம் இல்லாமல் இருக்கும் உன் கனவுகள்
சந்தர்ப்பம் வரும் போது- உன் பெயரை
சத்தமாக உச்சரிக்க வைக்கும்.

அப்துல் கலாமின் அழியாத கனவுகள்
அவரை விஞ்ஞானி ஆக்கியது போல்
எம் கனவுகள் எம்மையும்
எட்டாத உயரத்தில் வைக்கும்.

கனவுகள் கலைந்து போனாலும்- நீ
கனவு காண்பதை கலைக்காதே!
கலைந்து போன கனவுகள் யாவும்
காலமது வரும் போது எம்மை
வாழவைக்கும் என்று ஒரேயொரு கனவுகாண்
வலிகள் யாவும் வசந்தமாய் தோன்றும்!!!



இக் கவிதையை ஏற்கனவே 'காற்றலையின் கவிதைகள்' என்ற கவி தொகுப்பில் பிரசுரித்த போதும் மீண்டும் ஒருமுறை இங்கே பதிவிடுகிறேன்.



-இதயத்துடிப்பின் இடைவெளிக்குள்.....!-


No comments:

Post a Comment

என் கிறுக்கல்ளுக்கான உங்கள் கருத்துக்களை பகிருங்கள்