11 December 2012

ஆண்களை விற்கும் தமிழ் சமூம்!!!


                             ஆண்களை விற்கிறார்களா? எங்கே? என்று ஆவேசமாக கேட்பது புரிகிறது. ஆம்! சீதனம் என்ற பெயரில் திருமண சந்தையில் ஆண்கள் தினமும் விலைபோய் கொண்டிருக்கிறார்கள். மற்றைய சமூகங்களில் இல்லாதவாறு தமிழ் சமூகத்தில் அதுவும் அதிகமாக யாழ்ப்பாண கலாசாரத்தில் இவ் வியாபாரம் பிரசித்தமாகிவிட்டது கொடுமையான விடயம் தான்!



                    சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படும் திருமணங்கள் இன்று ரொக்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன. பெண்ணுடைய குணம், கல்வி என்பவற்றை விட எவ்வளவு சீதனம் என்பதிலேயே ஆண்வீட்டார் அதிகம் கவனம் செலுத்துகின்றனர். யாழ்ப்பாண கலாசாரத்தில் சீதனம் இன்றி ஒரு திருமணத்தை இப்போது கண்டுகொள்ள முடிவதில்லை. வெளிநாட்டு திருமணங்கள் கூட இப்போது அதற்கு விதிவிலக்கு இல்லை. காதல் திருமணங்களும் கடைசியில் சீதனத்திற்கு கட்டுப்பட்டுவிடுவது கவலைக்குரியதே!

                               முன்பெல்லாம் எம் மகளுக்கு தானே கொடுக்கிறோம் என்ற ஒரு திருப்தியுடன் தம்மால் இயன்றதை பெண்வீட்டார் கொடுத்து வந்தனர். ஆனால் தற்போது நிலைமை தலைகீழாகிவிட்டது. மாப்பிள்ளையின் தங்கைக்கு இவ்வளவு, பெற்றேர்ருக்கு இவ்வளவு என்று கணக்கு போட்டு பறித்துவிடுகிறார்கள். கஷ்டப்படடு உழைத்து. கடன் வாங்கி தன் பிள்ளைக்கு இல்லாமல் இன்னொருவர் பிள்ளைக்கும், வேறொரு குடும்பத்திற்கும் தம் பணத்தை கொடுக்கும் போது பெண் வீட்டாரின் மனநிலையை நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை.

                         தரத்திற்கு ஏற்ப பொருளின் விலை வேறுபடுவதை போன்றே இங்கேயும் பல விலைகள். படிப்பு, வேலை என்பவற்றை வைத்து தீர்மானிக்கிறார்களாம்! அண்மையில் நண்பர் ஒருவருடன் பேசிக்கொண்டிருக்கும் போது எதேட்சையாக சீதன பேச்சு வந்துவிட்டது. 'நீங்கள் எவ்வளவு சீதனம் வாங்கலாம் என்று இருக்கிறீர்கள்?' என்று கேட்டேன். உடனே தன் மேற்படிப்புக்கு செலவான பணத்தை கணக்கு போட ஆரம்பித்துவிட்டார். இவ்வளவாவது பரவாயில்லை, 'எனக்கு டீ கூட போட தெரியும், அதற்கும் சேர்த்து தான் சீதனம் வாங்க வேண்டும்' என்று சொல்லிவிட்டார். (அப்ப பாருங்களேன்!!)

                        தனது கல்வி, வேலை என்பவற்றிற்கேற்ப சீதனத்தை ஏற்றிக் கொண்டு போகும் ஆண்கள், பெண்களின் கல்வி, வேலையை கருத்தில் கொண்டு அதை குறைத்து விடுவதில்லையே. திருமணம் செய்த நாளிலிருந்து பெண் அந்த குடும்பத்திற்காக தானே உழைக்க போகிறாள்? உதாரணமாக ரூ25000 சராசரியாக உழைக்கும ஒரு பெண் 25 வயதில் திருமணம் செய்கிறாள் என வைத்துக் கொண்டால் குறைந்தது 30 வருடங்கள் வேலைக்கு சென்று ரூ9,000,000 (25000*12*30) அந்த குடும்பத்துக்காக கொடுக்க போகிறாள். இதெல்லாம் எந்தக் கணக்கில் போய் சேரப்போகிறது? ஏறக்குறைய ஆணுக்கு நிகராக உழைக்கும் பெண், ஆணுக்கு சீதனம் கொடுக்க வேண்டும் என்ற நிர்ப்பந்தம் நியாயமற்றது. 





                     எத்தனையோ திருமணங்கள் சீதனப் பிரச்சனையினால் நின்று போயிருக்கின்றன. இங்கே மற்றொரு உண்மை என்னவெனில் மாப்பிள்ளையின் தாய்மார் தான் இதில் மும்முரமாக இறங்குகின்றனர். ஏனோ தெரியவில்லை தந்தைமார் பெரிதாக அலட்டிக்கொள்வதில்லை. ஒருவேளை தான் சீதனம் வாங்கியதால் மனைவியிடம் வாழ்க்கை முழுவதும் திட்டு வாங்கிய அனுபவத்தினாலாக இருக்க கூடும்.

                    சீதனம் என்ற பெயரில் இன்னமும் பெண்களை அடிமைப்படுத்துகிறார்கள் என்று கவலைப்படுவதா இல்லை ஆண்களை வாங்கும் அளவுக்கு பெண்கள் வளர்ந்து விட்டார்கள் என்று சந்தோசப்படுவதா என்பது புரியவில்லை!

இங்கே நடப்பது என்னமோ பகல் கொள்ளை தான். ஆனால் இரு தரப்பும் வாங்குவதையும் கொடுப்பதையும் ஒருபோதும் நிறுத்தப்போவதில்லை. நல்ல கொள்கைகளுடனான ஆண்கள் தோன்றும் வரை இந்த பகல் கொள்ளைகள் தொடரும்......!!!



-இதயத்துடிப்பின் இடைவெளிக்குள்-

8 November 2012

என்னவன் –என் பார்வையில்-


கவிஞர்கள் எல்லோருமே பெரும்பாலும் பெண்களை வர்ணித்து தான் கவிதை எழுதிறாங்க. ஆண்களை வர்ணித்து கவிதைகளோ, பாடலோ வருவது ரொம்ப குறைவு. பெண் கவிஞர்கள் யாரும் அதில் ஆர்வம் காட்டுவதில்லை. நாம try
பண்ணிப் பார்த்தா தப்பாயிடாது என்ற ஒரு நம்பிக்கையோடு ஒரு கிறுக்கல்.



       என்னவன் 
–என் பார்வையில்-


என்னவன்......
எனக்கே உரியவன்
என் பார்வையில்.....!

அவன் கண்கள் - பார்ப்பவரை
கிறங்கடிக்க வைக்கும்
Hirithik Roshan இன் கண்கள்!

அவன் சிரிப்பு
Shahid kapoor இன்
சாகடிக்கும் அழகிய சிரிப்பு!

அடிக்கடி தன் தலைகோதும்
அந்த விரல்கள்
அழகான Parker pen கள்!

பாசம் காட்டுகையில்
பொங்கிவரும்
நாயகராவாய்....!

கோபத்தை control  பண்ண
மௌனம் காக்கையில்
அலைகளற்ற கடலாய்.....!

ஆனால் ஐந்து நிமிடத்தில்
அதை மறந்துவிடுகையில்
கஜினி சூரியாவாய்...!

தத்துவங்கள் பேசுகையில்
ஆபிரகாம் லிங்கனின்
அடுத்த பிறப்பாய்...!

சிந்திக்கும் வேளையில்
நாடியின் நுனியில் வளர்ந்(த்)திருக்கும்
தாடியை தடவுகையில்
Steve Jobs இன்
சின்ன வாரிசாய்....!

என் இதயத்தை
கடத்திச் சென்றதில்
வீரப்பனை விஞ்சியவனாய்...!


உள்ளத்தில் காதலும்
உதட்டில் நட்பும் கொண்டு
நடிக்கும் பொழுதுகளில்
நல்லதொரு நடிகனாய்....!

என்னைக் கவர்ந்து சென்ற
என்னவன் இதயம்......
எதற்கும் ஒப்பிடமுடியாததாய்....!

அது அவனுக்கு மட்டுமே சிறப்பானதாய்...
எனக்கு மட்டுமே  உரிமையானதாய்.....!!!



-இதயத்துடிப்பின் இடைவெளிக்குள்-

20 October 2012

நித்தியின் டயரியிலிருந்து......!!


                         கடந்த ஏப்ரல் மாதம் மதுரை இளைய ஆதினமாய் நியமிக்கப்பட்ட நித்தியானந்தா, நேற்றைய தினம் ஆதீன முதல்வர் அருணகிரிநாதர் அவர்களால் பதவி நீக்கம் செய்யப்பட்டார். இந் நிலையில் நித்தியானந்தா டயரி எழுதினால் இப்படித்தான் இருக்குமோ???




சிவனே என்றிருந்தேன்
சீண்டிப் பார்த்துவிட்டார்கள்!
கேட்காமல் கொடுத்துவிட்டு
சொல்லாமல் பறித்து விட்டார்கள்!

அவசியமெனில் விலகுகிறேன் என
அடிக்கடி அறிக்கை விட்டபடி
இப்படியே இப் பதவியில்
நிலைத்துவிடலாம் என்றல்லவா
நினைத்திருந்தேன்!!

இளைய ஆதீனமாய் இருந்து
இன்னும் எத்தனை பிகரை
கவுத்துவிடலாம் என்று
கணக்கு போட முன்பே - பதவியை
கவுத்து விட்டார்களே....!

ஆதினமே உந்தன்
அவசரமான முடிவுக்கு
கற்பிக்க போகும்
காரணம் யாதோ??

அருணகிரியே....- உனக்கு
அனுப்ப வேண்டிய பணத்தில்
அறியஸ் வைத்ததால் தான்
அதிரடியாய் தூக்கி விட்டாயோ?

தமிழ் நாட்டு அரசியல்
தலையிட்டதால் - கொஞ்சம்
தவித்துப் போய்விட்டாயோ?

பிரபல சீடர்கள் பெருகும் - இந்த
பிஸியான நேரத்தில்
பதவியை பறித்து விட்டால்
பக்தைகளுக்கு என்ன
பதில் சொல்வேன்?

ரஞ்சிதாவுக்கு மேலாக – நடிகை
கௌசல்யாவுக்கும் பதவி
கொடுத்து தொலைத்துவிட்டேன்.
எப்படித் தான் இவர்களை
எதிர்கொள்ளப் போகிறேனோ?

அவமானங்னள் கண்டு
அஞ்சிப் போய்விடவில்லை
ஏனென்றால் - இவையொன்றும்
எனக்குப் புதிதில்லையே!

அன்பு பக்தர்களே,
அருள் வாக்கு கூறுகிறேன்
அவதானமாய் கேளுங்கள்

'அழகாய் இருப்பவர்கள்
ஆன்மீகத்தை தேர்ந்தெடுத்தால்
அன்பர்களுக்கும் கஷ்டம்,
அவனுக்கும் கஷ்டம்'

எந்தன் நிலை கண்டு
எவருமே வருந்த வேண்டாம்
எந்தன் புகழ்
என்றுமே அழியாது.

புகழ் மங்கிப் போய்விட்டால்
புதிதாய் ஒரு CD வெளியிட
இன்னோர் ரஞ்சிதாவோ...
இல்லை ஆர்த்தி ராவோ...
இல்லாமலா போய்விடுவார்கள்???




-இதயத்துடிப்பின் இடைவெளிக்குள்-




3 October 2012

தாஜ்மஹாலுக்கு பின்னால்....!!


                         ஷாஜகான்-மும்தாஜ் காதலின் நினைவுச் சின்னமாய் நிமிர்ந்து நிற்கும் தாஜ்மஹாலின் பின்னால், மறைக்கப்பட்ட இன்னோர் உண்மைக் காதலின் கண்ணீர் காவியம் இது! பா.விஜயின் உடைந்த நிலாக்கள் கவிதை தொகுப்பில் இருந்து....!! ஷாஜகான் மும்தாஜ் என்ற உடைந்த நிலாக்களுக்காக உடைக்கப்பட்ட நிலாக்கள் தான் ஹரின்-திலோத்தி

                      கவிதை ஒரு காவியமாய் சிறிது நீண்டு சென்றாலும் வாசித்து முடித்ததும் இரு கண்ணீர் துளிகளை பரிசளிக்க தூண்டும் உணர்வுடன் பா.விஜயினால் வடிக்கப்பட்டுள்ளது! 





தாஜ்மஹாலுக்கு பின்னால்....!!

காதல் என்பது அஹிம்சை அல்ல,
தீவிரவாதம்!
காதல் என்பது சரணாகதியல்ல,
தன்னை உருக்குதல்!

உலகில் எல்லா நதிகளும்
சிரித்துக் கொண்டுதான் ஓடுகின்றன!
அழுது கொண்டு ஓடும் ஒரே நதி
யமுனை நதிதான்!

மும்தாஜ் என்ற
முப்பத்தேழு வயதுப் பௌர்ணமி
உதிர்ந்ததிலிருந்து ஷாஜகான்
கண்களில் கண்ணீர் என்ற
நட்சத்திரங்கள் உதிர்ந்து கொண்டிருந்தன.

சிறகுகள் இல்லாத
பறவையாய் மும்தாஜின்
கல்லறை!
கல்லறை அருகே பறவையல்லாத
அறுந்த சிறகாய் ஷாஜகான்!

ரத்தத்தில் நுரை பொங்க நுரை பொங்க
காதலில் ஷாஜகான்
கண்களில் கரை பொங்க கரை பொங்க
உயிர் சிந்துகிறார்.

'என் கண் ஒரு மலராய்
இருந்திருந்தால்,கல்லறை மீது
பறித்து வைத்திருப்பேன்'
முனகியபடி கல்லறையின்
கால்மாட்டில் அமருகிறார்.

ஷாஜகான் கண்களில் திரளுகின்ற
ஒரு நட்சத்திரம்
கல்லறை மீது சொட்டுகிறது.
கல்லறை கற்கள் சிலிற்கின்றன!
நடந்தது இதுவே!

ஷாஜகான் ஒரு கல்லை செதுக்கினார்!
மும்தாஜ் என்ற சிற்பம் கிடைத்தது!
சிற்பம் உடைந்துவிட்டது!
செதுக்கியவன் கல்லாகிவிட்டான்!

பேரரசர் ஜஹாங்கீர் ஷாஜகான்
உயிர்த்தெழ வேண்டுமெனில்
அவர் 'கனவு' கனவாகிவிடக் கூடாது.
மும்தாஜூக்கு மஹால் எழுப்ப வேண்டும்!

மாலை!
சூரிய கிரணங்கள் விண்ணில்
வர்ணகலா வித்தை செய்கிறது!

யமுனை நதி
மொஹலாய சாம்ராஜ்யம் போலவே
மௌனம் அனுஷ்டிக்கிறது!

அமைச்சரும் நண்பருமான ஆசிப் வருகிறார்!
அவருக்கு புரிகிறது!
ஷாஜகான் என்ற கப்பல்
மூழ்கத் தொடங்கிவிட்டது!
அந்தக் கப்பலுக்கு மும்தாஜ் தானே கடல்!

ஏழு லடசம் வீரர்களின் தலைவன்
பாழடைந்து உடகார்ந்து இருக்கிறான்!

ஒரு ராஜாதிராஜ தரிசனம்
சருகாய் காட்சி அளிக்கிறது.

பேரரசே' அழைக்கிறார் ஆசிப்.
மும்தாஜோடு பேசிக்கொண்டிருந்த
ஷாஜகான் திரும்புகிறார்!
மும்தாஜ் காற்றில் கரைகிறாள்!

பேரரசர் ஒரு பூவை எடுத்து வீசி
கல்லறையின் மீது அமர்ந்த ஓர்
ஈயைத் துரத்திவிடுகிறார்!

மொகலாய சிங்கம்
உடல் பொருள் ஆவி ஒடுங்கிக்
காணப்படுவதில் கண் கசிகிறார் ஆசிப்!

'ஹெசூர்! தங்கள் உடல் நலம்
பரிசோதிக்க வைத்தியர் வந்திருக்கிறார்'
ஷாஜகானின் மூடிய விழிகள் திறக்கின்றன!
கண்களுக்குள் வெறுமை!

'நீ என் நண்பனா?' சிங்கம் கர்ஜிக்கிறது!
'சொல் நீ என் நண்பனா?'
சிங்கம் இருமியபடி உறுமுகிறது!
ஆசிப் திணறுகிறார்!

'நீ என் நண்பனாக இருந்திருந்தால்
வைத்தியனையா அழைத்து வந்திருப்பாய்?
எமனையல்லவா அழைத்து வரவேண்டும்!'
ஷாஜகான் கண்மூடித் திறந்தார்
வெறுமை மறைந்தது!

'நண்பனே! எனக்கான வைத்தியன்
அதோ வருகிறான் பார்'

அனைவரும் நோக்கினர்!

பேரரசர் காட்டிய திக்கில்
கையில் மாதிரி ஓவிய சுருளுடன்
மான் போல் வந்து கொண்டிருந்தான்
ஓவியன் ஹரின்!

'ஆலம்பனா!' அழைக்கிறான்
அந்த இளம் வயது ஓவியன் ஹரின்!
ஷாஜகான் ஹரினை பார்க்கிறார்!
'மும்தாஜ் மஹால்' என்கிறார்!

ஹரின் தான் வரைந்த மாதிரி ஓவியத்தை
ஆலம்பனாவிடம் சமர்பிக்கிறான்!
ஷாஜகான் அதில் மூழ்குகிறார்!
அனைவரும் அசந்தனர்!

ஆனால் கண்களை தாளிட்டுக்
கொள்கிறார் அரசர்!
இது நான்காவது மாதிரி ஓவியம்!
இதுவும் சரியில்லையா?
ஹரின் வாடுகிறான்!

'ஓவியம் அழகாக இருக்கிறது!
மும்தாஜ் அழகாக இருப்பாள்!
ஓவியம் சோகமாக இல்லை!
நான் சோகமாக இருக்கிறேன்!
மும்தாஜையும் என்னையும் கலந்து
ஒரு ஓவியம் தேவை!'
ஷாஜகான் இதைத்தான் சிந்தித்தார்!

'மும்தாஜ் ஒரு பேரழகி!
அழகை ஓவியமாக்கினேன்!
மும்தாஜ் ஒரு மொஹலாஜ ரோஜா!
ரோஜாவை ரோஜாவால் வரைந்தேன்!

ஏன் அரசருக்கு அது பிடிக்கவில்லை?
அவர் உயிரை ஏன் என் ஓவியம்
தொட்டு தடவி சிலிர்க்கவில்லை?'
ஹரின் இதைத்தான் சிந்தித்தான்!

இறகாய் சென்றவன்
விறகாய் இல்லம் திரும்புகின்றான்!

புது மணவாழ்வு
திலோத்தி பூக் கூடையோடு
வெளிப்பட்டுப் புன்னகைக்கிறாள்!

பல் தெரியாது புன்னகைக்கும் பெண்!
ஓ.. இவள் சாருஹாசினி வகை!
விறகு மீண்டும் இறகாகிறது!
ஹரின் திலோத்தியை கண்களால்
கிள்ளுகிறான்! அவள் ஓடுகிறாள்!

பூக் கூடை கீழே விழுந்து
பூக்கள் சிதறுகின்றன!
ஹரின் துரத்துகிறான்!
இறைந்த பூக்களை காண்கிறான்!

'ஏய் புன்னகையிலிருந்து பூக்களை கொட்டிவிட்டு
எங்கே ஓடுகிறாய் திலோத்தி?'
திலோத்தி என்ற பதினாறு வயதுப்
பாற்கடலை ஹரின் என்ற ஓவியனின்
உதடுகள் குடிக்கத் துவங்குகின்றன!

பெண் கடலைக் குடித்து
முடித்தவர் யார்?

முற்றுப் புள்ளிகள் இல்லாமல்
கதை எழுத முத்தங்களால்
மட்டும் தானே முடியும்! எழுதினான்...
எழுத எழுத இசையும் கவிதையும்
புறப்பட்டது!

ஹரினின் உதடுகள் விடுதலையாகின்றன
திலோத்தியின் மேனி விடுவிக்கப்படுகிறது!

நீலம் பூத்த மங்கிய இருள் விலகி
கண்களுக்குள் ஒளி தோன்றுகிறது!
ஹரின் துள்ளிப் பரவுகின்றான்.

திலோத்தி எரியும் தன் உதடுகளுக்குப்
பாலாடை தடவியபடி,
ஹரினை குறும்பாய் நோக்குகிறாள்!
புரிந்த ஹரின் சிரிக்கிறான்!

'மலரே இதழில் காயமா?'
அவள் வெட்கத்தால் சில்லென்று ஒரு
கவிதை பூக்கிறாள்!

மீண்டும் ஒரு மன்மதலீலை
சொர்க்கத்தின் கதவை தட்டுகிறது!
அப்போது ஒரு ராஜாங்க ஓலை
ஓவியனின் வீட்டைத் தட்டுகிறது!
இன்பத்தில் மூழ்கிய தம்பதிகளுக்கு
கதவு தட்டும் ஓசை எட்டுகிறது!
ஹரின் மனம் கதவை திட்டுகிறது!

திறந்தான் கதவை – ஓலை!
பிரித்தான் ஓலையை – செய்தி!
படித்தான் செய்தியை - ஹரின்
திகைத்தான்! மிரண்டான்!
திலோத்தியும் ஓலையை படித்தாள்!

'மொகலாய பேரரசு அமைச்சர்
ஆசிப்பின் கட்டளை!
இன்னும் ஒரே ஒரு ஓவியம் தான்
நீ வரையலாம்
அது அரசர் மனம்படி அமைய வேண்டும்!
இல்லையேல் மரண தண்டனை'!

இரவு எனும் இன்பத் தேன்
மண் தரையில் கொட்டுகிறது!
ஹரின் திலோத்தியின் மனதை
தேள்கள் வந்து கொட்டுகிறது!

விஞ்ஞானம் நிலாவைக் கல் என்கிறது!
கவிதைகள் நிலாவை பெண் என்கிறது!
இரண்டுமே சரிதான்!

நிலா ஒரு கல் தான்!
நிலா ஒரு பெண் தான்!
எப்படியெனில் பெண் ஒரு கல்தான்!

ஆனால், அந்தக் கல்தான்
யுகங்களை, அண்ட சராசரத்தை,
மானிடத்தை இந்த நொடிவரை
மலர வைத்துக் கொண்டிருக்கிறது.
அந்தக் கல் பல சிற்பிகளை
செதுக்கியிருக்கிறது!

மரண தண்டனை என்ற தீர்ப்பின்
அதிர்விலிருந்து மெல்ல வெளியேறிக்
கல்லானாள் திலோத்தி.

காதல் - ஹரினுக்கு சிறகு!
காதல் - ஷாஜகானுக்கு புதை மணல்!
சிறகடிப்பவனுக்கு – புதைந்து
கொண்டிருப்பவனின் மனோநிலை,
இமையத்தை விட இரண்டடிகள் அதிக
தூரத்திலிருக்கிறது என்பதை திலோத்தி
உணர்ந்தாள்!

'அரசர் அழகான ஓவியம் கேட்கவில்லை.
சோகமான அழகை கேட்கிறாரோ!'
திலோத்தி திறனாய்ந்தாள்.

அன்று முழுப் பௌர்ணமி இரவு!
அண்ணாந்து கிடந்தான் ஹரின்!

குயிலிறகை மயிலிறகால் நீவுவது மாதிரி
ஹரினின் விரல்களை நீவினாள் திலோத்தி!

'அன்பே, அரசர் எதைத்தான்
எதிர்பார்க்கிறார்?'
திலோத்தி உதடு மீட்டினாள்.

ஒரு மெழுகுவர்த்தி எரிந்து முடியும் நேரம்
கழித்து, எரிந்து விழத் தொடங்கினான்
ஹரின்!

'மும்தாஜை... மும்தாஜை
ஒரு பிரமாண்டமான கண்ணீர் துளியை
ஷாஜகானின் இதய வலியை
அவர் அழுத மொத்தக் கண்ணீரையும்
ஒரே சொட்டாக்கினால், அவர் விரும்பும்
ஓவியம் வரையலாம் திலோத்தி'
ஹரின் குமுறிக் குமைந்தான்!

சுத்தக் கலைஞன் ஒரு
சுய மரியாதைக்காரன்.
தான் நிராகிக்கப்படுகிறோம் என்று
அறிந்தால், அதை துடைத்துக்கொள்வதில்லை.
தனக்குள் தன்னைத் தானே
உடைத்துக் கொள்கிறான்.

மூன்றாம் பால் காய்ச்சும் இரவில்
நிலா ஒளிப் பால் ஊற்றிக் கொண்டிருந்தது!
திலோத்தி வெள்ளிக் கோப்பையில்
பசும்பால் ஊற்றிக்கொண்டிருந்தாள்.

'அரசர் கேட்பது கண்ணீர் சிந்தும் ரோஜா!
அன்பர் வரைவதோ, புன்னகைக்கும் ரோஜா!
அரசர் துயரத்தின் ஆழத்திற்கு இவரால்
இறங்க இயலவில்லையோ?'
திலோத்தி சிந்தித்துக் கொண்டே
மாம்பழம் நறுக்கினாள்.

அவள் கை தந்தம்!
விரல்கள் - தந்தத்தில் பூத்த
சூரிய காந்தி தண்டு!

கத்தி மாம்பழத்தை அறுத்துக் கொண்டிருந்தது!
கண்கள் ஹரினை உற்றுக்கொண்டிருந்தது!
மனம் மஹாலை எண்ணிக்கொண்டிருந்தது!
கத்தி மெல்ல அவள் விரலை,
மாம்பழத்தின் கனிந்த பகுதி என்று
எண்ணி அறுத்துவிட்டது.

'ஸ்.... ஆ....'

அடுத்த நொடி அவள் விரல்
ஹரினின் உதட்டுக்குள்...

திலோத்தி அவனையே நோக்கினாள்.
ஆச்சரியமாய் அதிசயமாய் அடங்காத
காதலுடன் தனக்காக துடிக்கும்
அவனையே நோக்கினாள்.

நகக் கண்களில் தீப்பொறிபட்டதைப் போல்
ஹரின் பதறினான்.
திலோத்தியின் மனதில் ஒரு பொறி
புறப்பட்டது!

ஆலமரம் போலிருந்த அரசன்
காளான் போல் குறுகியிருந்தான்!

அரசனுக்கு உடல் நோயில்லை. மன நோய்!
மன நோய்க்கு மருந்து தேவையில்லை. ஓவியம்!

'ஆலம்பனா!' ஷாஜகான் நிமிர்ந்தார்.
குயில் நின்றிருந்தது.
'யாரம்மா நீ?'
'நான் ஓவியர் ஹரினின் மனைவி
திலோத்தி!'
ஷாஜகான் விளிகளுக்குள் சிற்றொளி.
ஒரு மாசம் அவகாசம் தேவை ஆலம்பனா'
பேரரசர் புருவம் வளைத்தார்.
'எதற்கு?'
'மும்தாஜ் மஹால் மாதிரி ஓவியம் வரைய'
'இவ்வளவு நாள் அவகாசம் இருந்ததே!'
குயில் மௌனமானது.
சிங்கம் பேசியது.
'ஒரு மாத அவகாசம் தந்தோம்'

குயில் சிட்டுக் குருவியாய் மாறி
சிறகடித்துப் போனது.

காதல் - எதிலிருந்து? எதுவரை?
அணுவின் துவக்கத்திலிருந்து
அஸ்தியின் பிடிவரை!
ஹரினுக்கு அறிய வைத்தாள் திலோத்தி!

'பெண் என்ற பிஞ்சுப் பிரபஞ்சமே
கனவாக நீயிருந்தால்
கண் விழித்தா நான் இருப்பேன்?
நிலமாக நீயிருந்தால்
நடக்கமாட்டேன் தவழ்ந்திருப்பேன்,
முள்ளாக நீயிருந்தால்
குத்திக் கொண்டு குதூகலிப்பேன்,
தீயாக நீயிருந்தால்
தினந்தோறும் தீக்குளிப்பேன்,
தூசாக நீயிருந்தால்
கண் திறந்து காத்திருப்பேன்,
மழையாக நீயிருந்தால்
கரையும் வரை நனைந்து நிற்பேன்'.

ஓவியன் ஒரு மாதமும் காதலாய்
கசிந்து உல்லாசியானான்!

காதலின் உச்சிவரைக்கும்
இன்பத்தின் சிகரம் வரைக்கும்
தாம்பத்தியத்தின் எல்லை வரைக்கும்
ஹரினை அழைத்து சென்றாள் திலோத்தி.

ஓவியப் பலகையில் ஒட்டடைகள் மண்டின.
வர்ண குழம்புகள் கெட்டிபட்டு போயின.

ஒரு நாள் மாலை வீடு
திரும்பினான் ஹரின்.

'திலோத்தி... திலோத்தி' என
மெல்லிசையாய் அழைத்தான்.

ஓவியப் பலகை சுத்தம்
செய்யப்பட்டிருந்தது. வர்ணக் குழம்பும்
தயார் நிலையில்...

ஒரு கடிதம் ஊசலாடியது.

'அன்பே!
சோகத்தின் ஆழம் அந்த சோகத்தின்
ஆழத்திற்கு இறங்குபவரால் தான்
உணர முடியும்.
ஆலம்பனாவின் மனசு உனக்கு
வரவேண்டுமெனில், ஆலம்பனாவின்
நிலைக்கு நீ வரவேண்டும்.
என்னை யமுனைத் தாயிடம்
ஒப்படைத்து கொள்ளப் போகிறேன்.
என் மரணம்,
உனக்குள் ஆலம்பனாவின்
உணர்சிகளை நிரப்பும்;.
ஒரே ஒரு ஓவியம் வரை!
அது மும்தாஜ்மஹாலை உருவாக்கும்.
அழுது முடித்தபின் நமக்காக வரை!
இந் நேரம் இறந்து போயிருக்கும்
திலோத்தி'.

'திலோத்தி!' – திசைகளில் எதிரொலிக்க
கத்தினான் கதறினான் உடைந்தான்
தூளானான் தூசானான்
ஒன்றுமின்றிப் போனான்.

திலோத்தி அவனுக்கு கடலானான்
அவன் கப்பலானான்
மூழ்கத் தொடங்கினான்.
ஷாஜகானின் வலி ஹரினுக்குள்...
அவனால் ஒரு பிரமாண்டமான
கண்ணீர் துளியை
கற்பனை செய்ய முடிந்தது.

வர்ணங்களை ஒதுக்கினான்
கண்ணீரின் நிறத்திலேயே
அந்தக் கண்ணீரை வரைந்தான்.

'அற்புதமான ஓவியம்'
ஷாஜகானின் உதடுகள் ஆண்டுகளுக்கு பின்
சிறிது மலர்ந்தது,

'அவள் எங்கே?
அந்த ஓவியனின் மனைவி எங்கே?
அவள் ஏதோ செய்திருக்கிறாள்.
ஹரினை ஷாஜகானாய் மாற வைத்து
ஓவியம் செய்திருக்கிறாள்'

அமைச்சர் ஆசிப் நடந்ததை கூறினார்
அதிர்கிறார் அரசர்.

'என்னது அவள் யமுனையாற்றில் விழுந்து
தற்கொலை செய்து கொண்டாளா?
அந்த ஓவியன் ஹரின் எங்கே?'

'யமுனைத் தாய் ஹரினுக்கு மட்டும்
இடமளிக்க மறுத்துவிடுவாளா என்ன?'
என்கிறார் ஆசிப்.

உலகில் எல்லா நதிகளும்
சிரித்துக் கொண்டுதான் ஓடுகின்றன.
அழுது கொண்டு ஓடும் ஒரே நதி
யமுனை நதி தான்!


உடைந்த நிலாக்கள்
-பா.விஜய்-





மும்தாஜின் மரணத்திற்காய்
தாஜ்மஹால் ஜனனம்!
தாஜ்மஹாலின் ஜனனத்திற்காய்
திலோத்தியின் மரணம்!

-இதயத்துடிப்பின் இடைவெளிக்குள்-






19 September 2012

இதெல்லாம் எப்படி சாத்தியம்???


                         நாம எப்போதும் அலுத்துக்கொள்ற விடயம், 'ஐயோ வாழ்கையில இன்ரஸ்டே வரமாட்டேங்குது, ஒவ்வொரு நாளும் ஒரே மாதிரியே போய்கிட்டிருக்கு' என்பது தான். கொஞ்சம் ஆச்சரியங்கள், மாற்றங்கள், எதிர்பார்க்காத விடயங்களை வாழ்க்கையில் எதிர்பார்க்கிறோம். அவை சில நேரங்களில் வலிக்க செய்தாலும் இப்படி ஏதேனும் வந்தால் தான் வாழ்க்கை சூடு பிடிக்கிறது. ஆனாலும் நம்ம வாழ்கையில நடக்கிற ஒவ்வொரு விடயங்களுக்கும் என்ன காரணம் என்பது எம்மால் புரிந்துகொள்ளக்கூடியதே. உதாரணமாக எதிர்பாரத விதமாய் உங்களுக்கு ஒரு லொட்டரி அதிஷ்டம் கிடைத்தால் அதன் காரணம் எம்மால் புரிந்து கொள்ள முடியும். அதாவது எப்படியோ யாரோ ஒருத்தருக்கு போக வேண்டியது உங்க இலக்கம் தெரிவு செய்யப்பட்டதால் அது உங்களுக்கு கிடைக்கிறது. அவ்வளவு தான்.


                           ஆனால் உலகத்தில் இடம்பெறும் சில ஆச்சரியமான நிகழ்வுகளுக்கு எம் பகுத்தறிவை கொண்டு காரணம் கற்பித்துவிடமுடியாது. அறிவியல், ஆன்மீகம் என்பவற்றினால் கூட சில ஆச்சரியப்படக்கூடிய சம்பவங்களுக்கு விளக்கம் கொடுக்க முடிவதில்லை. அத்தகைய சில நிகழ்வுகளை இங்கே பதிவிடுகிறேன். இதையெல்லாம் படிச்சிட்டு, இது எப்படி சாத்தியம் என்று குழம்பிட்டு இருந்தேன், இப்போ நீங்களும் என்னோடு சேர்ந்து கொஞ்சம் குழம்புங்களேன்.

Titan Vs Titanic
                     1898 இல் மோர்கன் ரொபேட்ஸன்(Morgan Robertson) என்பவர் 'டைட்டனின் அழிவு அல்லது நாசம் (The Wreck of the Titan or Futility) என்று ஒரு நாவல் எழுதினார்.  உலகிலேலேயே மிகப்பெரிய 'டைட்டன்' என்ற சொகுசுக் கப்பல் ஐஸ் பாறை ஒன்றில் மோதி கடலுக்குள் மூழ்கி பலர் இறந்து போகிறார்கள் என்பது தான் கதை. அட டைட்டானிக் மோதின சம்பவத்தை காப்பியடிச்சு நாவலா எழுதிட்டாரு என்று யோசிக்கிறீங்களா? இல்லை! நாவல் எழுதப்பட்டது 1898 இல், டைட்டானிக் கப்பல் மூழ்கியது 1912 ஏப்ரல்14 இல். நாவல் வெளிவந்த போது டைடானிக்கின் வடிவமைப்பு வேலைகள் கூட தொடங்கவில்லையாம். டைட்டன், டைட்டானிக் என்று பெயர்கள் மட்டுமல்ல நாவலில் குறிப்பிட்ட கப்பலின் கொள்ளளவு, நீள அகலங்கள், வேகம் என்பன கூட ஒத்துப்போகின்றனவாம். இது எப்படித்தான் சாத்தியமோ? சந்தேகம் இருந்தால் அந்த புத்தகத்துக்கான இணைப்பை இங்கே பகிர்து கொள்கிறேன் வாசித்துப்பாருங்கள்.


தாமதத்தால் காப்பாற்றப்பட்டவர்கள்
                             இது Life என்ற பத்திரிகையில் வெளியான உண்மை சம்பவம். அமெரிக்காவின் நெப்ராஸ்கா என்ற மாநிலத்தில் பீட்றைஸ் என்ற இடத்தில் உள்ள Church ஒன்றில் 1950 மார்ச் 1ம் திகதி 15 பேர் இணைந்து காலை 7.20 க்கு பாடுவதாக ஒரு நிகழ்ச்சி ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. ஆனால் அத்தனை பேரும் வேறுவேறு காரணங்களால் அங்கு வருவதற்கு தாமதமாகிவிட்டது. ஒருவர் ரேடியோ கேட்டுகொண்டிருந்நதாலும், இன்னொருவர் படித்துக் கொண்டிருந்ததாலும், வேறொருவருக்கு கார் பிரச்சனை கொடுத்ததாலும் இப்படி வேறுவேறு காரணங்களால் வர தாமதமானது. குறிப்பிட்ட Church இல் காலை 07.25 க்கு குண்டு வெடித்ததில் Church தரைமட்டமானது. இவர்கள் தாமதமாக வந்ததால் உயிர் பிளைத்துக் கொண்டனராம்!!!! 


ஜோசப் டி லூயிஸ் 
                       அமெரிக்காவை சேர்ந்த முடிதிருத்த கலைஞரான ஜோசப் டி லூயிஸ் என்பவர் 1969 ஜனவரி 16ம் திகதி சிக்காகோ நகரிலுள்ள ஹோட்டல் ஒன்றினுள் சென்று 'பேப்பர் கொடுங்க, ரயில் விபத்தை பற்றி என்ன போட்டிருக்காங்க என்று பாக்கணும்' என்று சொன்னாராம். 'விபத்தா? எங்க? எப்ப?  பேப்பரில ஏதும் இல்லையே' என்று மற்றவங்க சொன்னாங்களாம். 'இங்கிருந்து தெற்குப் பக்கத்தில 2 ரயில் பனிமூட்டத்தில மோதி நிறையபேரு செத்திட்டாங்க' என்றாராம் ஜோசப். அதுக்கப்புறம் றேடியோ போட்டு பாத்தால் ஏதுவுமே சொல்லல. இரண்டு மணிநேரம் கழித்து தான் அப்படி ஒரு விபத்து தற்போது நடந்தது என்று றேடியோவில சொன்னாங்களாம். விபத்து இடம்பெற முன்னரே ஜோசப்பிற்கு இப்படி ஒரு விபத்து நிகழ்ந்ததாக மனதில் தோன்றியிருக்கிறது. அதை தொடர்ந்து எதிர்வரப்போகும் விபத்துக்கள் பற்றி எதிர்வு கூறி நிறைய பலித்தும் உள்ளனவாம்!!!!


மன்னரும் ஹோட்டல் உரமையாளரும்
              1900 ம் ஆண்டு ஜூன் மாதம் இத்தாலிய அரசர் உம்பர்டோ ஒரு ஹோட்டலுக்கு உணவருந்த சென்ற போது ஹோட்டல் உரிமையாளர் தோற்றத்தில் அவரைப் போலவே இருந்தார். அவரை கூப்பிட்டு கதைத்த போது அவர் பெயரும் உம்பர்டோ என்று தெரிய வந்தது. இருவர் மனைவியின் பெயரும் மார்கரிட்டா. மன்னர் முடி சூட்டிய அதே நாளில் தான் அவரும் ஹோட்டலை தொடங்கியிருந்தார். இருவரும் பிறந்தது 14-03-1844 இல். அதன் பின் ஒரு மாதம் கழித்து 29-07-1900 இல் ஹோட்டல் உரிமையாளர் துப்பாக்கி சூட்டில் சற்று முன் காலமானார் என்ற செய்தியை மன்னர் கேள்விப்பட்டார். சில மணிநேரங்களில் மன்னரும் ஒரு வன்முறைக் கும்பலால் கொல்லப்பட்டார்!!!!  


மின்னலின் கொலைவெறித்தனம்
               மேஜர் சம்மர்ஃபோர்டு என்ற இங்கிலாந்து ராணுவ அதிகாரிக்கும் மின்னலுக்கும் இருந்த தொடர்பு ஆச்சரியமானது. அவர் முதலாம் உலகப்போர் சமயத்தில் குதிரையில் இருந்து போர் புரிந்து கொண்டிருந்த போது மின்னல் தாக்கி இடுப்பிற்கு கீழ் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டார். பின் அவர் ஓரளவு குணமாகி கனடா நாட்டில் குடி பெயர்ந்தார். அங்கு ஆறாண்டு காலம் கழித்து மீன் பிடித்துக் கொண்டு இருந்த போது மறுபடியும் மின்னலால் தாக்கப்பட்டு வலது பக்கமும் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டது. மறுபடி குணமடைந்த அவர் உள்ளூர் பூங்காவில் உலாவிக் கொண்டிருந்த போது மின்னலால் தாக்கப்பட்டு உடம்பு முழுவதும் செயல் இழந்தார். அது நடந்து இரண்டாண்டுகளில் மரணம் அடைந்தார். இறந்த பின்னும் அவரை மின்னல் விட்டுவிடவில்லை. நான்காண்டுகள் கழிந்து அவருடைய கல்லறை மின்னலால் தாக்கப்பட்டு சிதறிப்போனது!!!!


இரட்டை சகோதரர்கள்
                     Ohio வில் பிறந்த இரட்டையர் வாழ்க்கையின் ஆச்சரியமான குறிப்புகள் 1980 ஜனவரி மாத ரீடர்ஸ் டைஜஸ்டில் வெளி வந்துள்ளன .40 வருடங்களுக்கு முன் இருவரும் பிறந்தவுடனேயே பிரிக்கப்பட்டு இருவேறு தொலைதூரக் குடும்பங்களுக்குத் தத்துத் தரப்பட்டனர். இருகுடும்பங்களும் ஒன்றிற்கு ஒன்று தெரியாமலேயே குழந்தைகளுக்கு ஜேம்ஸ் என்று பெயரிட்டனர். இருவரும் சட்ட அமலாக்கப் பிரிவில் வேலைக்கு அமர்த்தப்பட்டனர். இருவருக்குமே பல திறமைகள் ஒன்றாகவே இருந்தன. இருவரும் லிண்டா என்ற பெயருடைய பெண்களையே முதல் திருமணம் செய்து கொண்டனர். இருவருமே தங்கள் மகன்களுக்கு ஜேம்ஸ் ஆலன் என்ற பெயரையே இட்டனர். இங்கே சின்ன வித்தியாசம் சொல்ல வேண்டும் என்றால் ஒருவர் James Alen என்றும் இன்னொருவர் James Allen என்று ஒரு "L" எழுத்து சேர்த்தும் பெயர் வைத்தனர். இருவரும் முதல் மனைவியை விவாகரத்து செய்து இரண்டாம் திருமணம் செய்து கொண்டது பெட்டி என்ற பெயருடைய பெண்களை. இருவரும் தங்கள் நாயிற்கு Toy என்ற பெயரையே வைத்திருந்தனர். நாற்பதாண்டு காலம் கழிந்து 1979 இல் அவர்களுக்கு 39 வயசாகும் போது இணந்த அந்த இரட்டையர் தங்களை அறியாமல் தங்கள் வாழ்க்கைகளில் இருந்த ஒற்றுமையை எண்ணி அதிசயித்தனர்!!!!




                            இதெல்லாம் எப்படி நடக்குது?? நம்மள மீறின சக்தி ஏதாவது இருக்கா?? என்று யோசிக்க போனால் குழப்பம் தான் மிச்சம்! எதிர்கால விஞ்ஞானமும் அறிவியலும் தான் இவற்றை கொஞ்சம் தெளிவுபடுத்த வேண்டும். இப்போதைக்கு என்னுடன் சேர்த்து உங்களையும் கொஞ்சம் குழம்ப வைத்ததில் திருப்தியே.....!!!



-இதயத்துடிப்பின் இடைவெளிக்குள்-

14 August 2012

ஹிப்னாடிஸம்(Hypnotism) : ஓர் பார்வை


                      ஹிப்னாடிஸம் என்பது என்ன? ஒரு மருத்துவ முறையா, இல்லை போர்க் கலையா? இதனை பயன்படுத்தி நமது பார்வையின் மூலம் மற்றவர்களை கட்டுப்படுத்தலாம் என்கிறார்களே அது சாத்தியமாகுமா? தமிழில் நோக்கு வர்மம் என்பதும் ஹிப்னாடிஸமும் ஒன்று தானா? இத்தகைய சந்தேகங்கள் நம்மில் பலருக்கு இருக்க கூடும். இவை பற்றி விரிவாக பார்ப்பதற்கு முதல் ஹிப்னாடிஸம் உருவான வரலாறை சுருக்கமாக பார்த்துவிடுவோம்.



ஹிப்னாடிஸத்தின் வரலாறு

                       மெஸ்மரிஸம் என்ற கலையின் வளர்ச்சியே ஹிப்னாடிஸமாக கருதப்படுகிறது. கி.பி 1700ம் ஆண்டுகளில் மெஸ்மர் என்பவர் நியூட்டனின் புவியீர்ப்பு விசையை அடிப்படையாக கொண்டு மனிதர்களில் ஓர் ஆய்வு நடத்தினார். அதாவது, திணிவுள்ள பொருட்கள் மீது புவியின் ஈர்ப்புசக்தி செல்வாக்கு செலுத்துவது போல், மனிதன் மனம் மீது எவ்வாறு செல்வாக்கு செலுத்துகிறான் என்பது தொடர்பான ஆராய்ச்சி அது. அவ் ஆராய்ச்சியின் முடிவில் மனிதனை சுற்றி காந்தப்புலம் இருப்பதாக கண்டறிந்து, காந்த சக்தியின் உதவியுடன் பல நோயாளிகளையும் குணப்படுத்தி வந்தார். இவ் சிகிச்சை முறை அவரின் பெயராலேயே மெஸ்மரிஸம் என அழைக்கப்பட்டது. ஆனால் இவ் சிகிச்சை முறை எவ்வாறு சாத்தியமாகின்றது என்பதை மெஸ்மரால் ஆதாரபூர்வமாக நிரூபிக்க முடியவில்லை. 1843ம் ஆண்டில் ஜேம்ஸ் பிராயிட் என்பவர் மெஸ்மரிஸம் தொடர்பாக மேற்கொண்ட விரிவான ஆராய்ச்சியில் உருவானதே ஹிப்னாடிஸம்.


ஹிப்னாடிஸம் என்பது......

                      இது ஒருவருடைய மனதை இன்னொருவர் தனது ஜீவ சக்தியின் மூலம் கட்டுப்படுத்தி, அவருடைய மனதில் தன் கட்டளைகளை பதியச் செய்யக் கூடிய ஒரு கலை. ஹிப்னாடிஸம் செய்யப்பட்டவர் ஹிப்னாடிஸம் செய்யும் போது வழங்கிய கட்டளைகளை அதன் பின்னர் அவ்வாறே நிறைவேற்றுவார். ஆனால் ஹிப்னாடிஸத்தின் போது அவ்வாறான கட்டளைகள் தனக்கு வழங்கப்பட்டதையோ, அத்தகைய ஒரு நிகழ்ச்சி நடந்ததையோ அவர் அறிந்திருக்கமாட்டார். இங்கு முக்கியமான ஒரு விடயம் ஒருவரின் அனுமதி இன்றி அவரை ஹிப்னாடிஸம் செய்துவிட முடியாது என்பதாகும்.


இது எவ்வாறு சாத்தியமாகின்றது?

                       இங்கே தான் மனிதனுடைய மனம் பற்றி தெரிந்து கொள்வது அவசியமாகின்றது. மனிதனின் மனம் வெளி மனம்( Conscious mind), உள் மனம்(Sub-conscious mind) என இரண்டாக நோக்கப்படுகிறது. நமது உடலுக்குள் மனம் எங்கே உள்ளது என்பதையே அறிந்து கொள்ள முடியாத எமக்கு இதனை புரிந்து கொள்வது சிறிது கடினம் தான். வெளி மனம் நமது அன்றாட செயற்பாடுகள், நாளாந்த தேவைகளை பதிந்து வைத்துக் கொள்ளும். இது காலப்போக்கில் தேவையானவற்றை மட்டும் வைத்துக் கொண்டு அவசியமற்றதை மனதிலிருந்து அழித்துவிடும். அதனால்தான் நாம் தோல்விகளையும் அவமானங்களையும் மறந்து வாழமுடிகிறது. உள் மனம் அபார சக்தி வாய்ந்தது. உள்மனதில் பதியப்பட்ட விடயங்கள் என்றும் அழிந்துவிடாது. நமது வாழ்க்கையில் இடம்பெறுகின்ற மிகவும் பாதிக்கத்தக்க நிகழ்வுகள் நம் உள் மனதில் பதிந்துவிடுகிறது. உள் மனதில் பதியப்பட்ட விடயங்கள் தவறாக இருந்தாலும் நாம் அதை நம்ப ஆரம்பித்துவிடுவோம். நமது அன்றாட செயற்பாடுகளில் ஈடுபடுவது வெளிமனமாக இருந்தாலும், அதற்கு ஆதாரமாக இருப்பது உள் மனம் தான். உள் மனதில் பதிந்துள்ள நிகழ்வுகள், எண்ணங்கள், இலட்சியங்கள் என்பவற்றின் அடிப்படையிலேயே நமது வெளிமனம் அன்றாட செயற்பாடுகளில் ஈடுபடுகிறது.

                    சரி,இந்த மனங்களிற்கும் ஹிப்னாடிஸத்திற்கும் என்ன தொடர்பு என்பது பற்றி பார்ப்போம். ஹிப்னாடிஸத்தின் போது வெளிமனதை தூங்கச் செய்து உள்மனதோடேயே உரையாடுகின்றனர். இதன்போது உள் மனதில் பதிந்துள்ள நிகழ்வுகளை அவர்கள் மூலம் கேட்டு அறிந்து கொள்ள முடியும். இந்த வகையிலேயே ஹிப்னாடிஸம் ஒரு மருத்துவ முறையாக பயன்படுத்தப்படுகிறது. மன உழைச்சல், உள நலப்பாதிப்பு போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டவர்களின் வெளிமனதை ஹிப்னாடிஸத்தின் உதவியுடன் தூங்கச்செய்து, அவர்களின் பிரச்சனைகளை உள்மனதிடம் கேட்டு அறிந்து கொள்ள முடியும். அத்துடன் பிரச்சனைக்குரிய தீர்வுகளை நோயாளிகளின் உள் மனதில் பதியும்படி சொல்கின்ற போது, அவர்கள் அதை அவ்வாறே நம்பி குணமடைந்து விடுவார்கள். ஹிப்னாடிஸத்தின் இந்த கருத்தையே 'அந்நியன்' திரைப்படத்தில் சங்கர் உபயோகித்திருந்தார். அதாவது, அம்பியாகிய விக்ரமின் மனதில் உண்டான தாக்கங்களை அறிந்து கொள்வதற்காக விக்ரமை ஹிப்னாடிஸம் செய்வதாக அந்தக் காட்சி அமைந்திருந்தது.
                                   மருத்துவ முறையாக மட்டுமல்லாது, ஒருவரை பழிவாங்கும் எண்ணத்துடனும் ஹிப்னாடிஸத்தை பயன்படுத்தகூடிய சாத்தியங்கள் உண்டு. ஆனால் ஹிப்னாடிஸம் என்ற கலையில் அதனை அழிவுக்காக பயன்படுத்துவது அனுமதிக்கப்படவில்லை.




ஹிப்னாடிஸம் பற்றிய சில குழப்பங்கள்

ஹிப்னாடிஸம் செய்பவர்கள் தமது விரல்களை அல்லது சிறு தடியை சுற்றிக் கொண்டிருப்பது ஏன்?
                              இது தொடர்பான சில வீடியோக்கள் பார்க்கும் போது ஹிப்னாடிஸம் செய்பவர்கள் தமது விரல்களை அல்லது சிறு தடியை சுற்றிக் கொண்டிருப்பதை பார்த்திருப்பீர்கள். இதற்கான காரணம் அலைந்து கொண்டிருக்கும் நம் வெளிமனதை ஏதாவதொன்றில் நிலைக்க செய்து தூங்க வைப்பதற்காகவாகும். ஆனால் ஹிப்னாடிஸம் செய்யும் அனைவரும் அதை உபயோகப்படுத்துவதில்லை. ஹிப்னாடிஸத்தை மையப்படுத்தி ரவிபாபுவின் இயக்கத்தில் ரவிபாபு, சினேகா மற்றும் பூமிகா நடிப்பில் தெலுங்கில் வெளிவந்த 'அமராவதி' என்ற திரைப்படத்தில் இது அழகாக காட்டப்படுகிறது. இத் திரைப்படம் தமிழில் 'யார்' என்ற பெயரில் டப்பிங் செய்து வெளியிடப்பட்டிருந்தது.

ஹிப்னாடிஸம் தான் நோக்கு வர்மமா?
                            எனது தேடலில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் ஹிப்னாடிஸமே தமிழில் நோக்குவர்மம் என அழைக்கப்படுகிறது. ஆனால் இரண்டும் ஒன்றா என்பது குழப்பத்திற்குரியதே. நோக்கு வர்மத்தில் பார்வையின் மூலம் மற்றவருடைய மனதை கட்டுப்படுத்த முடியும். விளக்கமாக சொல்வதானால் சூர்யாவின் ஏழாம் அறிவு திரைப்படத்தில் பயன்படுத்தப்பட்டது நோக்கு வர்மமே. ஒருவரின் அனுமதியின்றி யாரையும் ஹிப்னாடிஸம் செய்துவிட முடியாதென மேலே குறிப்பிட்டிருந்தேன். ஆனால் பார்வையாலே மற்றவர்களின் அனுமதியின்றி நம் கட்டளைகளை மற்றவர்களின் மனதிற்குள் பதிக்க நோக்கு வர்மத்தால் முடிகிறது. எனவே நோக்குவர்மமும் ஹிப்னாடிஸமும் ஒன்றல்ல என்ற முடிவுக்கு வரமுடிகிறது. நோக்கு வர்மத்தின் ஒரு துளியே ஹிப்னாடிஸம் எனக் கொள்ளமுடியும்.
                              நோக்கு வர்மம் கி.பி 500ம் ஆண்டுகளில் இந்திய தமிழரான போதி தர்மரால் பரப்பபட்டது. ஆனால் ஹிப்னாடிஸம் கி.பி 1800ம் ஆண்டுகளிலேயே வளர்ச்சியடைந்தது. இந்த சந்தர்பத்தில் தமிழரென்ற ரீதியில் ஒரு முறை பெருமைகொள்ள முடிகிறது.

நோக்கு வர்மம் இன்று நடைமுறையில் இருக்கின்றதா?
                       நோக்கு வர்மம் அழிந்துவிட்டது, இன்றைய நாட்களில் அது ஒரு கண்கட்டிவித்தை மட்டுமே, இது பொய்யென நிருபிக்க முடியும் என சில கட்டுரைகளில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த சந்தேகத்தை தீர்ப்பதற்கான தேடலில் Vijay TV யில் 'நடந்தது என்ன' என்ற நிகழ்சியில் இடம்பெற்ற நோக்கு வர்மம் தொடர்பான ஒரு Video  கிடைத்தது. இந் நிகழ்ச்சியில் நோக்கு வர்மம் இன்னமும் கேரளாவில் நடைமுறையில் உள்ளதென்பதை உறுதிப்படுத்தியிருந்தார்கள். அதற்கான இணைப்பை இங்கே பகிர்ந்து கொள்கிறேன். 


                                ஹிப்னாடிஸம், நோக்கு வர்மம் இவை ஒரு கடல் இதை முழுமையாக கடந்தவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். உளவியல் ரீதியான ஹிப்னாடிஸமானது மன உழைச்சல் நிறைந்த இக் காலத்தில் எவ்வளவு முக்கியமானதோ, தீய வழியில் பயன்னபடுத்தும் போது அதை விட ஆபத்தாக மாறிவிடும் என்பது உண்மையே!




-இதயத்துடிப்பின் இடைவெளிக்குள்-


1 August 2012

மறு(றை)க்கப்பட்ட காதல்!!!


முதன் முதலாய் அவள்
முகம் பார்த்தது
நினைவில் இல்லை – ஆனால்
அவள் கண்கள் என்னை
அளந்து கொண்டிருந்ததை நான்
கண்டுவிட்ட அந்த கணங்கள்
இன்னும் மனதில் இருக்கிறது.


யாரோ என்று அறியாதபோதும்
ஏதோ ஒரு உணர்வை
நெஞ்சில் நெருட வைத்தன
அவள் பார்வைகள்.....!!!


அடிக்கடி சந்தித்துக் கொண்டபோதும்
அந்த நிமிடங்களிலெல்லாம்
இமைகளை படபடக்க விட்டு
உதடுகளை ஊமையாக்கிக் கொண்டோம்.


காலம் கை தந்தது....
சந்தர்ப்பம் சந்திக்க வைத்தது
ஒருவாறு பேசி, பழகி
உடன்படிக்கை உருவாக்கி கொண்டோம்!!


உடன்படிக்கை??????
ஆம்.....
நட்புக்கான உடன்படிக்கை!
சந்தோசங்களை சரிபங்கிடவும்,
தோல்விகளில் தோள் சாயவும்
தோழி என்ற ஒப்பந்தம்!!!


வீட்டின் சண்டைகள் முதல்
விண்வெளியின் சந்தேகங்கள் வரை
விலாவாரியாக பேசிக்கொண்டோம்.


ஆனாலும்......,
நட்பென்ற போர்வைக்குள்
காதலை அவள் மறைத்துக்கொண்டதை
என் உள்ளம் உணராமல் இல்லை.


காதல் சாதலின் ஆரம்பம் என்ற
கொள்கையுடைய என் வாழ்விலும்
ஒரு காரிகை...!!!


மூளைக்கும் மனதிற்கும் இடையில்
ஒரு போராட்டம்....!
கொள்கைக்கும் உணர்வுக்கும் இடையில்
ஒரு தடுமாற்றம்...!


வாழ்க்கைக்கு வட்டம் போட்டு
வாழ்ந்து கொண்டிருப்பவன் நான்!!
பூமிப் பந்தின் விளிம்பில் நின்று
புதுமைப் படைப்பை ரசிக்க துடிப்பவள் அவள்!!


கொள்கைகளும் தத்துவங்களும்
பேசிக் கொண்டிருந்தேன் நான்!!
கனவுகளிலும் கற்பனைகளிலும்
மிதந்து கொண்டிருந்தாள் அவள்!!


காதல் என் கல்விக்கு கல்லறை
கட்டிவிடும் என்று - மனதிற்கு
காவல் போட்டிருந்தேன் நான்!!
காதலை யாரும் குறை கூறிவிடக் கூடாதென்று
கஷ்டப்பட்டு கல்வியில்
முதலிடம் பெற்றுக்கொண்டாள் அவள்!!


எனக்கும் அவளுக்கும்....
எத்தனையோ வேறுபாடு - காதல்
எட்டாப் பொருத்தம் என்றேன்,
விலகிவிடச் சொன்னேன்,
மறந்துவிட மன்றாடினேன்.


அரும்பில் கிள்ளிவிடு - இல்லையேல்
விபரீதம் ஆகிவிடும் என்றேன்,
விருட்சமாகிவிட்டது என்று சொல்லி
கை விரித்தாள்!!


மறுநாள் ஒரு பரிசுப்பொதியுடன்
முன் வந்து கை நீட்டினாள்!
பிரித்துப் பார்த்தேன்
அழகிய பேனா...!!


'பேனா' உறவுகளை பிரித்துவிடும் என்று
காதலிலும் நட்பிலும்
கருத்து நிலவுவது தெரியாதோ என்ற
சந்தேகப் பார்வையை வீசினேன்.


அது உண்மையானால்....
அப்படியாவது உன்னை
பிரிந்துவிடுகிறேன் என்று
கண்ணில் நீருடன்
காரணம் சொல்லிப் போய்விட்டாள்!!


உள்ளம் கனத்தது – எந்தன்
கண்ணிலும் நீர் கசிந்தது
ஆனால் உதடுகள் மட்டும்
காதலை சொல்ல மறுத்து
பிடிவாதம் பிடித்தது!!


உணர்வுகளை அடக்கிக் கொண்டு
உதட்டை பூட்டிக் கொண்டேன்!!
உள்ளம் தன்பாட்டில் அழுது கொண்டது!!

நெடுநாள் கழித்து....
கடல் கடந்து போகின்றேன்
கடைசியாய் சந்திக்க வேண்டுமென்று
தகவல் அனுப்பியிருந்தாள்.


மறைத்து வைத்த என் காதலை
மனது உடைத்துவிடும் என்ற அச்சத்தில்
வேண்டுகோளை மறுத்துவிட்டேன்!!


அவள் கொடுத்த பேனா
நம் பிரிவை நிச்சயமாக்கி விட்டு
நிரந்தரமாய் என்னுடன்
நிலைத்துவிட்டது!!


கண்மூடி திறப்பதற்குள்
காலம் காற்றாய் பறந்தது...
ஏதேதோ மாற்றங்கள் என் வாழ்விலும்
அரங்கேறியது!!


ஆறு ஆண்டுகள் கழிந்தது!!
அன்று ஏதோ ஓர் யோசனையில்
அந்த Shopping complex  இன்
ஒரு மூலையில் நின்றுகொண்டிருந்தேன்!!


மனதில் ஏதோ தோன்ற
மறுபுறம் திரும்பி பார்க்கையில்
அதே விழிக்கும் கண்களுடன்
அங்கே நின்றிருந்தாள் அவள்!!!


நெற்றியில் இட்ட கறுப்பு பொட்டு
அவள் இன்னமும் யாருக்காகவோ
காத்துக்கொண்டிருக்கிறாள் என்று
காட்டிக் கொண்டது.


அவள் கண்களில் தெரிந்த தாகம்
அந்த காத்திருப்பு எனக்காகத்தான் என
உறுதிப்படுத்திக் கொண்டது!!!


என் நிலையை அறிந்துவிட
அவள் கண்கள் - என் கையில்
மோதிரத்தை தேடியதை
நான் காணாமல் இல்லை!!


அவளுக்கு கஷ்டம் வைத்து விடாமல்
தூரத்தில் இருந்து ஓடி வந்து – என்
காலைக் கட்டிக்கொண்டு
'அப்பா' என்றழைத்தது என் குழந்தை!!!!


அந்த ஓர் வார்த்தையில்
அவள் உடைந்து போய்விட்டாள்...
நான் குறுகிப் போய்விட்டேன்!!!


ஓர் வார்த்தை பேசவில்லை
ஓர் புரியாத பார்வை வீசிப்போனாள்
என்னால மறித்து பேச முடியவில்லை
ஏனெனில்...... அங்கே
என் மனைவி வந்து கொண்டிருந்தாள்.


போனவள் என்னவானாள் என்று
போதிய தகவல் கிடைக்கவில்லை...
தெரிந்துகொண்டு என்ன செய்வதென்றும்
எனக்குப் புரியவில்லை....!!


காதலிப்பதாய் சொல்லவில்லை
காத்திருப்பதாய் சொல்லவும் இல்லை – ஆனால்
காயப்படுத்திவிட்டேன் என்று - என்
கல் நெஞ்சம் கலங்கியது.


அவள் காதலில் தப்பில்லை – நான்
அதை ஏற்க தவறியதும் தப்பில்லை....
நம்மை சந்திக்க வைத்த
கடவுள் செய்ததே தப்பு.......!


அவளது  உண்மைக் காதலை
கல் நெஞ்சு கொண்ட என்மீது
காட்டவைத்த இரக்கமற்ற
கடவுள் செய்ததே தப்பு.......!


காதல் கொண்ட இதயங்களை
காயப்படுத்திய களிப்புடன்
கடவுள்....!!!


அழுவதற்கு கூட
அனுமதி பறிக்கப்பட்டவனாய்
நான்....!!!


இருவரது இதயத்திலும்
இன்னமும் வாழ்கின்றேன் என்ற
இன்பத்தில் நம் காதல்!!!
இல்லை... இல்லை
அவள் காதல்....!!!!





-இதயத்துடிப்பின் இடைவெளிக்குள்....!-

18 July 2012

நகர வாழ்க்கையின் எழுதாத பக்கங்கள்

               எத்தனையோ கனவுகளை நனவாக்கும் எண்ணங்களோடு, தன் உறவுகளைப் பிரிந்து நகரம் எனும் நரகத்திற்கு வந்து தனித்து வாழும் உள்ளங்களின் வலிகளை வார்த்தைகளாக்கி கொண்டு வருகிறது இப் பதிப்பு. ஏதேதோ எதிர்பார்ப்புக்களுடன் வேலை தேடியோ, உயர்கல்விக்காகவோ நகரத்தை நாடி வரும் இளைஞர் யுவதிகளின் புலம்பல் இது.


                   'என் மகன் கொழும்பில் படித்துக் கொண்டே வேலை பார்க்கிறான்' என்று ஊரில் பெற்றோர்கள் பெருமை அடித்துக்கொண்டு திரிகின்ற போதும் time table வாழ்க்கைக்குள் சிக்கித் தவிக்கும் மகனின் நிலமை கவலைக்கிடம் தான்! கொஞ்சம் திரும்பிப்படுத்தால் பக்கத்திலுள்ள சுவரில் முட்டிக் கொள்ளும் அளவிற்கு சிறியதாய் ஒரு room. அதிகாலையில் அன்பாய் எழுப்பும் அம்மாவின் குரலுக்கு பதிலாய் அலரித் தொலைக்கும் cell phone இல் set பண்ணி வைத்த அலாரம். எழுந்திருக்காமலே cell phone இல் face book log in செய்து friends இன் birthday list check பண்ணி wish பண்ணுவதில் தொடங்குகிறது நம் time table வாழ்க்கை. அவசரமாய் குளித்துவிட்டு அவசர அவசரமாய் நாமே tea போட்டு குடிக்க வேண்டிய நிலமை. என்ன இருந்தாலும் tea போடுவது பெண்களின் வேலை என்று வறட்டுக் கௌரவத்தில் ஒரு tea க்கு கூட சாப்பாட்டுக் கடையில் தங்கியிருக்கும் ஆண் நண்பர்களும் இங்கே இருக்கத்தான் செய்கிறார்கள். ருசி இல்லாத போதும் பசிக்காய் புசிக்கும் restaurant சாப்பாடு தொண்டைக்குள் இறங்க ரொம்பவே அடம்பிடிக்கும்.

 

                Bus பிடிப்பதற்கு கால்கடுக்க நடக்கும் போது Discovery இலும் Scooty pep இலும் ஊரில் சுற்றித் திரிந்த நினைவுகள் வந்து வலிக்கத்தான் செய்கின்றன. Bus இல் ஏறி Head set ஐ காதில் கொழுவிக் கொண்டு பாடல்களை தட்டிவிட்டால் தான் பயணம் முழுமை பெறுவது போன்ற ஓர் உணர்வு. போகின்ற இடத்தில் தாய் மொழியை தவிர்த்துவிட்டு வேற்று மொழியில் பேச நிர்பந்திக்கப்படும் போதெல்லாம் நம் பேச்சு சுதந்திரமும் பறிக்கப்படுகிறது என்ற சிந்தனை வரத்தான் செய்கிறது.

                  எல்லாம் முடித்துக் கொண்டு மீண்டும் room க்குள் வந்து அடங்கிவிட இரவாகிப் போகிறது. ஓவ்வோர் நாளும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் வீட்டில் இருந்து வரும் தொலைபேசி அழைப்புக் கூட நம் time table குள் சிக்கித் தவிக்கிறது. எப்போதும் வரும் வீட்டாரின் அழைப்பு, எப்போதாவது வரும் நட்புக்களின் அழைப்பு என்று தொலைபேசிக்குள்ளேயே நம் சொந்தங்களை அடக்கிவிடுகிறோம். தூங்கி எழுந்துவிட்டால் மறுநாள் மீண்டும் அதே வாழ்க்கை, அதே ஓட்டம்.




                          Kik இல்லாமல் சுற்றிக்கொண்டிருக்கும் வாழ்க்கையில் kik ஏற்றுவதற்காய் சில exams அடிக்கடி எட்டிப் பார்க்கும். இங்கே படிக்கும் நாட்களை விட பரீட்சை நாட்கள் அதிகம், படுத்து உறங்கிய நேரங்களைவிட படித்துக் கொண்டே உறங்கிய நேரங்கள் அதிகம். Exams நெருங்கும் வரை புத்தகங்களை disturb பண்ண விரும்புவதில்லை. Exam வந்ததும் study leave எடுப்பதற்காய் university இலும் work இலும் எடுத்து விடும் பொய்கள் நம் கற்பனை திறனின் அத்திவாரம். Study leave என்ற பெயரில் வீட்டில் நின்றாலும் நிம்மதியாய் படித்துக்கொள்ள முடிவதில்லை. மூன்று வேளை சாப்பாடு எடுப்பதற்காய் வெளியில் சென்று வருவதிலேயே நேரம் சரியாகிப் போகிறது. அக்கறையுடன் சமைத்துக்கொடுக்க அருகில் அம்மா இருப்பதில்லையே! இதற்காகவே மூன்று வேளையை இரண்டாகவோ, ஒன்றாகவோ சுருக்கிக் கொண்டு notes ஐ சப்பித் தொலைக்கும் நட்புக்களும் உள்ளன.





                         ஊருக்குப் போவதற்காய் போயாவும் strike ம் தேடி அலைந்து குறைந்தது மூன்று நாள் விடுமுறை கிடைத்துவிட்டால் வருகின்ற சந்தோசமே தனி! இரவு bus ஐ பிடித்துவிட்டால் மறுநாள் சூரியோதயம் ஊரில் தான். அங்கும் நம் ஓட்டம் அடங்குவதில்லை. 'இங்க வந்தும் வீட்டில் ஆறுதலாய் நிற்கவில்லை' என கோபித்துக்கொள்ளும் குடும்பத்தினர், 'வந்ததற்கு ஒருமுறை தானே நம்மை சந்திக்க வந்தாய்' என குறைபட்டுக்கொள்ளும் நட்புக்கள் என அன்புத் தொல்லைக்குள் மாட்டித் தவிக்கிறது நம் விடுமுறை நாட்கள். எல்லாவற்றிற்கும் மேலாக பணப் பிரச்சனை. அது வேண்டும், இது வேண்டும் என வீட்டில் அப்பாவிடம் list கொடுத்து சட்டம் போட்டுக் கொண்டிருந்து விட்டு, இங்கே வந்து budget இல் வாழ்க்கை நடத்த வேண்டிய நிலமை. ஆனாலும் இன்றாவது நம்மில் பலருக்கு பெற்றோரின் கஷ்டம் புரிந்தது வரவேற்கத்தக்கதே.

                       இத்தனை கஷ்டங்களையும் எதற்காக புலம்புகிறேன் என்று சிந்திக்கிறீர்களா? இத்தனை வலிகளையும் உணர்ந்து தாம் நகரிற்கு வந்த நோக்கத்தை அடைவதற்காய் வாழும் நட்புக்கள் எத்தனை உள்ளன? பல கஷ்டங்கள் பட்டு பெற்றோர் அனுப்பி வைக்கும் பணத்தை party என்ற பெயரில் குவாட்டர் சொல்லி வீணடிக்கும் ஆண்களும், style என்ற பெயரில் beauty centers இல் இறைக்கும் பெண்களும் இவற்றை உணர மறந்துவிட்டனரோ? நம் நல் எதிர்காலத்தை எதிர்பார்த்து பெற்றோர்கள் காத்திருப்பார்கள் என்பது நினைவில் இருப்பதில்லையோ? ஏற்றுக்கொண்ட வாழ்க்கை கசப்பாய் இருந்தாலும் அதற்கான காரணம் புரிந்துவிட்டால் கஷ்டங்கள் மறைந்துவிடும். நாம் இத்தனை வலிகளையும் சுமக்கின்றோம், நம் வாழ்க்கை வழி தவறிப் போவதற்காய் அல்ல என்று அனைத்து நட்புக்களும் புரிந்து கொண்டால் நாளைய நாட்கள் நம் கையில்....!

காதலித்து இவ் வாழ்க்கையை
கட்டிக் கொள்ளவில்லை!
கட்டிக் கொண்டதால்தான் இன்னும்
காதலித்துக் கொண்டிருக்கிறோம் - நம்
கனவுகளை நனவாக்குவதற்காய்......!!



-இதயத்துடிப்பின் இடைவெளிக்குள்-

11 July 2012

கனவுகள் கலைந்தன

கனவுகள்! இவை எம் இனத்தின்
கலையாத நினைவுகள்!
கனவுகள் கண்டு கண்டே
கனத்துப் போயின எம் கண்கள்!

பால் பருகும் குழந்தை முதல்
பல் விழுந்த பாட்டி வரை
பகலிரவாய் கனவுகள்
ஆனால் பலிக்காத கனவுகள்!

விளையாட்டு விமானம் வாங்கி வர
வீதி வரை சென்ற தந்தை
விமான குண்டுகளால் வீழ்ந்த போது
வீணாகிப் போயின பாலகனின் கனவுகள்!

பள்ளிப் பருவமதில்
பாடசாலை சென்ற போது
பணக்காரர்களின் பகிடிவதைகளில்
பாழாகிப் போயின ஏழையவன் கனவுகள்!

கல்லூரிப் பயணமதின் கடைசிப் பாதையிலே
கலைந்து போகையிலே
தொலைந்து போயின – எம்
கறையில்லா நட்பின் கனவுகள்!

வேலையற்ற பட்டதாரியாய்
வேலை தேடி அலைந்த போது
காசு வலை வீசி காக்கா பிடிக்கும்
காரியதாரிகளிடம் கலைந்து போனது
கல்வி கற்றவனின் தொழிற் கனவுகள்!

உயிருக்குயிராய் காதலித்த- உன்
உண்மைக் காதலன் தன் மனைவியை
உன்னிடம் அறிமுகப்படுத்திய போது
உடைந்து போயின உன் வாழ்க்கை கனவுகள்!

அம்மி மிதித்து, அருந்ததி பார்த்து,
ஆசி கூறி செய்து வைத்த கல்யாணம்
விவாகரத்து கோரி நிற்கையிலே
வீணாகிப் போயின அந்த வீட்டின் கனவுகள்!

முதிர்வுக் காலமதை – தன்
மூத்த பிள்ளையுடன் கழிக்க விரும்பிய
மூதாட்டியின் முக்கிய கனவுகள்
முதியோர் இல்லத்தில் மூழ்கிப் போயின!

சமாதானத்தை எதிர்பார்த்து
சதா ஏங்கித் தவித்த போது
யுத்தத்தில் கலைந்தன
தமிழனின் அமைதிக் கனவுகள்!

எங்கும் கனவுகள்
எப்போதும் கனவுகள்- ஆனால்
எதிர்பாராத விதமாய் எம்மை
ஏமாற்றும் கனவுகள்!

சகோதரா! சோர்ந்து விடாதே!
சத்தம் இல்லாமல் இருக்கும் உன் கனவுகள்
சந்தர்ப்பம் வரும் போது- உன் பெயரை
சத்தமாக உச்சரிக்க வைக்கும்.

அப்துல் கலாமின் அழியாத கனவுகள்
அவரை விஞ்ஞானி ஆக்கியது போல்
எம் கனவுகள் எம்மையும்
எட்டாத உயரத்தில் வைக்கும்.

கனவுகள் கலைந்து போனாலும்- நீ
கனவு காண்பதை கலைக்காதே!
கலைந்து போன கனவுகள் யாவும்
காலமது வரும் போது எம்மை
வாழவைக்கும் என்று ஒரேயொரு கனவுகாண்
வலிகள் யாவும் வசந்தமாய் தோன்றும்!!!



இக் கவிதையை ஏற்கனவே 'காற்றலையின் கவிதைகள்' என்ற கவி தொகுப்பில் பிரசுரித்த போதும் மீண்டும் ஒருமுறை இங்கே பதிவிடுகிறேன்.



-இதயத்துடிப்பின் இடைவெளிக்குள்.....!-


8 July 2012

முதன் முதலாய் அம்மாவுக்காய்....!

                         நினைவு தெரிந்த நாள்முதல் நம் முதல் தெய்வம் அன்னையவள். உயிர் கொடுத்து, உயிருக்கு இந்த உடல் கொடுத்து, என் உணர்வுகளுக்கு உயிரூட்டிக் கொண்டிருக்கும் அன்னைக்காய் ஓர் பதிப்பு. கவிதை என்ற பெயரில் ஏற்கனவே ஏதேதோ கிறுக்கிய போதும் அதில் அன்னைக்கு முதல் இடம் குடுக்கவில்லையே என்ற நெடுநாள் காயத்திற்கு மருந்திடும் வகையில் வலைப்பதிப்பில் முதல் பதிப்பாய் 'முதன் முதலாய் அம்மாவுக்காய்.....!'


                    ஆணோ, பெண்ணோ, நல்லவனோ, கெட்டவனோ என்ற எம் ஜாதகம் ஏதும் தெரியாத போதும் குறைவில்லா அக்கறையுடன் கருவறையில் சுமந்தவள் நம் தாய். எதிர்பார்ப்பு எதுவும் இன்றி எம் நல் எதிர்காலத்துக்காய் தன்னை உருக்கி எம் வாழ்வுக்கு ஒளியூட்டிக் கொண்டிருக்கும் மெழுகுவர்த்தியாய் என்றென்றும் அவள்.

                நோயுற்ற நாட்களின் இரவுப் பொழுதுகளில் மணிக்கொருமுறை எழுந்து நெற்றியை தொட்டுப் பார்க்கும் தாயின் அன்பில் ஓடிப் போகிறது எந்தவொரு நோயும்...! தமக்குப் பிடித்ததே எமக்கும் பிடிக்க வேண்டுமென்று விருப்பு வெறுப்புக்களைக் கூட திணிக்கும் உறவுகளுக்கிடையில், எங்கள் சந்தோசத்துக்காய் தன் விருப்பு வெறுப்புக்களை தியாகம் செய்யும் தாயின் அன்பில் கடவுள் கூட தோற்றுப் போகிறான். தன்னால் செய்யமுடியாத சிலவற்றை நிறைவேற்றுவதற்காய் கடவுளால் பூமிக்கு அனுப்பி வைக்கப்பட்ட உறவு தான் தாயோ என பலமுறை வியந்திருக்கிறேன்.

                சுமக்க முடியாமல் சுமக்கும் பரீட்சையின் சுமைகள், இதயத்தை இரண்டாக கிழித்துக்கொண்டிருக்கும் மறக்க முடியாத நினைவுகள், வலி கொடுக்கும் தோல்விகள் இவை எல்லாவற்றையும் துரத்திவிட்டு நிம்மதி தரும் அழகிய இருப்பிடமாய் தாயின் மடி. அன்னையவள் மடியில் தலைசாய்த்து படுத்துவிட்டால் நிம்மதியை எனக்கென வாங்கி விட்டதாய் ஓர் உணர்வு. சொல்ல முடியாத சோகங்கள் சுமைகளாய் தோன்ற காரணம் சொல்லாமல் அவள் மடியில் அழுது தொலைத்துவிட்ட தருணங்களில், காரணம் கேட்டு வதைக்காமல் என் தலைகோதி மனம் நோகாமல் ஆறுதல் சொல்லுகையில் எதற்கும் ஒப்பிட முடியாத உன்னத உறவாய் அவள். நம் வெற்றி கண்டு பூரித்துப் போய் நிற்கும் தாயின் முகம் தரிசித்த பின்பு தான் புரிகிறது அந்த வெற்றியின் உண்மையான அர்த்தம். 



          உணர்வுகளை பகிர்ந்து கொள்கையில் தோழியாயும், தந்தையால் மறுக்கப்பட்ட நம் வேண்டுகோளுக்கு சம்மதம் பெற வாதாடுகையில் நல்லதொரு சமாதான தூதுவராயும் நமக்கு ஏற்றவளாய் மாறுகின்ற போதும் அதிகாலை வேளையில் தட்டி தட்டி தூக்கத்தை கலைக்கும் போது நம்மிடம் திட்டு வாங்கத்தான் செய்கிறாள். யார் யாரோ மீது வெளிக்காட்ட முடியாத கோபங்களையெல்லாம் அம்மாவின் மேல் காட்டும் போதுகோபித்துக் கொள்ளாமல் 'இன்று யார் கணக்கு என் மேல் விழுகிறது?' என்று கேட்கும் தாயின் புரிந்துகொள்ளல் தன்மையை பார்த்தவுடன் எந்தன் கோபங்கள் கூட என் மேல் கோபித்துக் கொள்கிறது. எனக்கு மட்டுமல்ல, ஒவ்வொரு ஜீவனுக்கும் முக்கிய தெய்வம் தாயாகிறாள். ஒவ்வொரு தாய்க்கும் முக்கிய உறவு தன் குழந்தையாகிறது.

'எனக்கொன்று ஆனதென்றால்
 உனக்கு வேறு பிள்ளையுண்டு
உனக்கேதும் ஆனதென்றால்
 எனக்கு வேறு தாய் இருக்கா?'
                               என்ற வைரமுத்துவின் கவி வரிகள் வெறும் வார்தைகள் மட்டுமல்ல. இவை கண்ணில் நீரை பொங்க வைத்த நிஜ வரிகள். தாயின் அன்பு வார்த்தைக்குள் அடக்க முடியாதது. அவள் அன்புக்குள் இந்த உலகமே அடங்கிவிடுகிறது. அந்த அன்புக்கு அடிமைப்பட்ட ஒரு ஜீவனாய் நானும் இங்கே....!





-இதயத்துடிப்பின் இடைவெளிக்குள்.......!-